Friday, December 25, 2009

அன்பில்லா அண்ணனுக்கு! ( கவிதை- உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு)


சிட்டிபானை சோறு சமைத்து
உனக்குத்தான் முதலில் தருவேன்.
நீ என்னை கிள்ளி விட்டு
அழ வைத்து சிரித்திருப்பாய்.

நம் மதிப்பெண்களை ஒப்பிட்டு
என்னைப் பாராட்டும் மறுநாளே,
என் புதுப்பேனாவோ, புத்தகமோ
நிச்சயமாக தொலைந்திருக்கும்.
அப்பா என்னை திட்டும் போது
நீ யாருக்கும் தெரியாதென
மர்மப் புன்னகை பூத்திருப்பாய்.

கெஞ்சிக் கூத்தாடிய பிறகும், உன்
சைக்கிளை தொடக் கூட விட மாட்டாய்.
நானாக பழகும் போது, உதவ வந்த
பக்கத்து வீட்டு பையனை
ஏனோ வம்பிழுத்து அடித்து வைப்பாய்.

என்னை நீராட்டிய அன்று
நீயும் அடம்பிடித்து
புதுச்செயின் வாங்கிப் போட்டதை
பெருமையென நினைத்துக் கொண்டாய்,
என்னுள் உன்பிம்பம்
நொறுங்குவது தெரியாமல்.

உன் சுகதுக்கங்கள் உனக்கு.
தங்கையின் வயிற்று வலிக்கு
மாத்திரை வாங்குவது கேவலம்,
எதிர்வீட்டுப் பெண்ணின் நாய்க்கு
பவுடர் வாங்குவது மனிதாபிமானம்.

உன் நண்பர்கள் வரும்பொழுது நான்
அடுப்படி தாண்டி வெளியே வரக்கூடாது,
என் தோழிகள் உன் பார்வைக்கு பயந்தே
நம் வீட்டுக்கு வருவதும் கிடையாது.

என் முதல் தோழனாய்
உன்னைத் தான் நினைத்திருந்தேன்.
நீயோ ஒரே வீட்டில் வசிக்கும்
சக உயிரினமாய் கூட
என்னைக் கருதவில்லை.

இந்த பதினெட்டு வருடத்தின்
ஏதாவது ஒரு நொடியில்
என்னை நீ உணர்ந்திருந்தால்
இன்று எனக்கும் கூட தோன்றியிருக்கும்
படி தாண்டி போனபின்பு
என் அண்ணனும் தலைகுணிவானே என்று !

(கவிதை - உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்காக)