Wednesday, May 6, 2009

சுழியம் .... இல்லாததன் துவக்கம்

துவங்காமல் இருக்கும் ஒரு செயலோ , திறக்காமல் இருக்கும் பொருளோ எப்போதும் நம்மை வசீகரிக்கவே செய்கிறது..... போலவே, ஒன்றுமில்லாததைக் குறிக்கும் சுழியமும், ஏதோ அனைத்தையும் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டு , நிசப்த்தமாய் இருப்பது போலவே உணர்கிறேன்.... இல்லாததை கையில் வைத்திருக்கும் வெறுமையின் போது கூட , எல்லாவற்றையும் மனதில் நிறைத்திருப்பதாய் புன்னகைக்கும் குழந்தையைப் போல.

மஞ்சளும், பச்சையும், சிகப்புமாய் சிதறிக்கிடக்கிறது திரை முழுதும், புண்ணிய நதியில் ஊதிப் பெருத்து மிதந்து வரும் பிணங்களையும், தீயில் குளிக்கின்ற போராளியின் உயிராயுதத்தையும், நடிகைகளின் அங்க அமைப்புகளையும் விரலசைவுகளில் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம். நேரம் நெருங்குகையில் விளையாட்டை நிறுத்தி விட்டு, மின்சாரம் இல்லாமல் இரவு தூங்க வேண்டிய கொடுமையை நொந்த படி அட்டையை தேய்த்துவிட்டு வெளியேறுகிறோம். பதறவும், சிதறவும், சிறகடிக்கவும் செய்யும் நிகழ்வுகள் எல்லாம் இரண்டடி தூரத்தில் நிகழ்ந்தது போன்ற பிம்பத்தைத் தாண்டி நிற்காமல் செல்லப்போகின்ற பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது இந்த இணைய வலை எல்லாம் சுழியமாகத் தான் தெரிகின்றது.

ஏதேதோ பேசுகின்றோம், இருப்பை நிலைநிறுத்த ஏதேதோ எழுதுகின்றோம், இல்லையென்றாலும் ஏதோ ஒன்றை உருவாக்க முயற்சித்து, முடியாவிட்டால் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, பெருமிதப் பார்வையை படர விட்டு மகிழ்கின்றோம். மகிழ்ச்சியின் எல்லையில் மாற்றங்கள் தேவைப்படும் போது பழையதை அழித்து விட்டு, புதிய முகமூடியை அணிந்து கொண்டு மீண்டும் சுழியத்திலிருந்து தொடங்குகின்றோம்.

துவங்காமல் இருக்கும் அல்லது துவங்கத் தயாராகக் காத்திருக்கும் சுழியத்திலிருந்து எண்ணிக்கை ஏதுமற்ற அல்லது எண்ணிக்கை அனைத்தையும் கடந்த சுழியம் நோக்கி எழுதுறேன்.......... அனைவருக்கும் வணக்கங்கள் !!!